thamizhini

Mar 29, 2010


















எம் மண்ணைப் போல்
என் மானத்தையும் பந்தாடுங்கள்.
"நான் உங்கள் சகோதரி" என்று கதறலாம்
பொருட்படுத்த வேண்டியதே இல்லை.

ஐயோ! அப்படி எல்லாம் உற்றுப் பார்க்காதீர்கள்
நெற்றியில் ஒரு பொட்டிடுங்கள்
உங்கள் துப்பாக்கி முனையால்.....
உடல் உண்பவர்கள் தானே நீங்கள்!

எறும்புகள் மொய்க்கிறதே
உங்கள் நகங்கள் என் உடலில்
கோலங்களோ போட்டுள்ளன?

தேடி என் தாய் வரலாம்
அந்த ஒரு சேலை தான் அவளிடம்
அதையும் உருவி விடாதிர்கள்..

என் உடலை எந்த மரத்துக்கும்
உரமாக்க வேண்டாம்...
எரிந்து சாம்பலாகி விடும்.

பயப்பிட வேண்டாம்
உங்களுக்கு ஒன்றுமே தெரியாது
இது உங்கள் நீதிமன்றம்.

சரி தயாராக இருங்கள்
இதோ
உங்கள் சோதனைச்சாவடியை
நெருங்கி  வந்து கொண்டிருக்கிறேன்........

No comments: